புத்துலகொன்று...












புதிதாய் மலர்ந்த புத்துல கொன்று
அதிலே இன்பம் தித்திப்பு கண்டு
வதிவார் ஒன்றாய் கூடியவர் நின்று
சாதித்து காண்பார் சரித்திரம் ஒன்று!

கொலைவெறி கொண்ட கொடுஞ் சிலையர்
நிலைகொள் அடிமைத் தனஞ் செய்வார்
புலையரும் தீயரும் கொடியருங் கள்வரும்
இலையிந்த இன்னல் இலாத உலகினில்!

தீங்கெளா நெஞ்சம் தீரமுடை உள்ளம்
எங்கெனும் காணா அன்பு மனம்
ஓங்கிடு முழைப்பு கொண்டிடு மனிதர்
தேங்கியே வாழ்வர் எழில்மிகு உலகில்!

பாதகம் இல்லைப் பணிவும் இல்லை
சாதகம் பார்த்துச் சாதிப்ப தில்லை
பேதமை நெஞ்சம் கொண்டவ ரில்லை
சாதனை செய்தே சரித்திரம் படைப்பர்!

சாதிகள் இன்றி வகுப்புக ளின்றி
சகலரும் சமம் சரிநிகர் என்று
வர்க்கம் ஒழித்து வசந்தம் காண்பர்
சொர்க்கம் இதுவே வேறுலக மில்லை!

கொடுமை இல்லாக் கொள்கை வாழ்வு
விடுதலை கொண்ட விவேக வாழ்வு
கெடுதல் இன்றி வளர்ந்தே வரும்
புத்துலகு ஈதில் புதுமை வாழ்வு!

அழ.பகீரதன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது