யார் கேட்டார்கள்
யார் கேட்டார்கள்
இரண்டாயிரத்து முப்பத்தொன்றின்
ஓர் வைகறைப் பொழுதில் கேட்கின்றீர்
ஊரில் யாரும் இல்லையா?
தேர் இழுக்கவும்
சாமி வாகனத்தில் இருத்திக்
காவவும் சனம் இல்லையாம்
கேள்வி மேல் கேள்வி
கோயிலில் பூசை பார்க்கவும்
ஆட்கள் இன்றி
அலறும் ஒலிபெருக்கியில்
அந்தணர் குரல் மேவிட
சென்றங்கு பார்த்தால்
ஐந்தோ ஆறோ பேரே
அங்கிருந்து வணங்குகிறாராம்
எங்கட சனத்துக்குக்
கோயிலுக்குப் போறதவிடத்
தோதான வேறென்ன பொழுதுபோக்கு
தொலைபேசியில் கேட்கிறீர்
நீவிரும் நாமும்
சிறுபராயமதில் இராத் திருவிழாவில்
நித்திரை விழித்துச்
சின்னமேளமும் பெரியமேளமும்
பார்த்த அந்தக் காலத்திலேயே
ஊர் இருக்கும் எனும்
நினைப்பா உமக்கு?
போர் மூண்ட காலமும் போய்
ஆண்டு இருபதுக்கு மேல் ஆச்சு
தேர் ஒன்றே எம் இலக்கெண்டு
மாறுமெண்டு ஆர் கண்டது அன்று
பைரவரும் தேர் ஏறக்
காலம் வாச்சுதெனக்
காசனுப்பி வைச்சீர்
சிறுவர் சிறுமியர்
கூடிக் கெந்திப்பிடித்த
வான் பார்த்த உள்வீதி
வாய்ப்பான கூரையுடன்
வண்ணமிகு சித்திரச்
சுவர் நீள
மாபிள் தரை ஜொலிக்கக்
கோபுரம் மேவிடப்
பெருங்கதவம் வாசலில்...
யார் செல்வார் உள்ளே
தேர் ஓடும் வீதிக்காய்
அறம் கற்ற மண்டபமும்
அவதிக்குள் ஆகுமெனில்
ஆர் மனதில் தெய்வம் உறையும்
நீர், சென்ற காலந்தொட்டு
ஊர்க் கோயிலுக்கே
பேருவகை கொண்டு
உவந்து ஈந்தீரெனினும்
தேர் இழுக்க ஊர் திரளவில்லை என
வேதனை மிகப் பேசுவீர்
யார் கேட்டார்
தேர் வேண்டும் என்று
யார் கேட்டார்
பெரு மஞ்சம் வேண்டுமென்று
யார் கேட்டார்...
சமூக அக்கறை கொண்டுயாரும்
அண்டினரோ உம்மை..?
24.04.2021
கருத்துகள்