இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புரிந்திட வைப்போம்

நாம் அனைவரும் மனிதர்கள் என எழுவோம் நமக்குள் நாம் கலந்திடில் கயவர் விலகுவர் சிங்களமும் தமிழும் எமக்குள வழங்கள் சங்கடப் படாது மொழியினை கற்போம் புத்தர் தந்த புனித தம்ம பதம் ஏற்போம் புரிந்திட வைப்போம் ஆர்க்கும் அறத்தை!

புரிந்திட வைப்போம்

நாம் அனைவரும் மனிதர்கள் என எழுவோம் நமக்குள் நாம் கலந்திடில் கயவர் விலகுவர் சிங்களமும் தமிழும் எமக்குள வழங்கள் சங்கடப் படாது மொழியினை கற்போம் புத்தர் தந்த புனித தம்ம பதம் ஏற்போம் புரிந்திட வைப்போம் ஆர்க்கும் அறத்தை!

விளக்கம் புரிந்திடில்!

எனக்குள் நீயும் உனக்குள் நானும் என்னில் நீயும் உன்னில் நானும் என்னால் நீயும் உன்னால் நானும் என்னொடு நீயும் உன்னொடு நானும் கலப்பது நிசமெனில் விலக்கென ஏனெமக்குள் சாதியம் இனத்துவம் மதம்... இல்லாப்  பிரிவினைகள் எதற்கெமக்குள்? விதைத்தெது எவரோ! விளக்கம் புரிந்திடில் விலக்குவோம் பிரிவினைகள்.. கலந்திடப் புரிதல்கள்!

இயலும், எண்ணுவமோ?

பெண்ணின விடுதலையைப் பெற்றுத் தரவென்றோ கண்ணகி கோயில் முன் தவமிருக்கின்றனர் பெண்ணின விடுதலை பெற்றிட அறியாமை, தெளியாமை கொண்டதனாலன்றோ முடியா நிலைமை ஆயிற்று கண்கண்ட தெய்வம் நம்முள் உள அறிவே என உணரில் விண்முட்ட எழுந்திட விடுதலையும் சித்திக்கும் பெண்ணெனத் தலை நிமிர்ந்திட காமுகரும் திகைப்பர்! எண்ணில் ஏற்றம் பெறுதல் இயலும்,  எண்ணுவமோ?

பகுத்து அறிந்திடில்...

தெளிவு பெறுவோம் தேறுவோம் ஒளிபெறுவோம் ஒளிவு மறைவின்றி இயல்பாய் பேசிடுவோம் பண்பு பெறுவோம் பாலிய மங்கையரை பேணிடவே! பற்றுக் கொள்வோம் நல்நெறி நலம் காப்பதிலே! மோகம் காமம் ஒப்பிய திரை மறை நிலை ஒழிய பள்ளி மாணவர் பண்பு நிலை காத்திடவே பகுத்து அறிந்திடில் பாலியல் கல்வி வேண்டுமென்பேன் வகுத்துக் கொடுப்பதற்கு இன்னுமேன் தயக்கம்?

உலகப்பன் விருப்பின்படி...!

முன்னோக்கி நகர் என்றால் என்னோக்கு பிழை என்பார் பல்லினம் வாழ்தேசம் இதுவென நல்நோக்கில் சொன்னால் செல்லாக் காசாய் கருதுகின்றார் செருக்கோடு செப்புகின்றார் தருவார் எனத்தான் இன்னமும் தலை எடுக்கின்ற இனமானம் உருமாறி அருகேறி அலறுவதால் உலக இயல்பு இதமாகிடுமோ உலகேன் இயற்றும் எமக்காய்...? உறவாவர் கோடிக்கதிபதியரோடு உலகது எப்போதும் போலவே உலகப்பன் விருப்பின்படி...!

மனமாற்றம் வந்திடுமோ?

இப்படி இருப்பதால் தான் இப்படி நிகழ்கின்றன எனில்  எப்படி? எப்படி..?  ஆணியம் பெண்ணை இழிவுபடுத்த வேணியம் கொண்டு இருப்பதெனில் எப்படி? எப்படி...? சினிமா, சித்திரம், பத்திரிகை இணையம் எனத் தொடர்ந்து பெண்ணை  அரை நிர்வாணமாக்கி இரசனைக்காய் காட்டுவரெனில் ஆண்கள் பெண்நிலை புரிந்து எண்ணத்தில் கொள்வரோ மனமாற்றம் வந்திடுமோ? இன்றெம் இளையவர் போக்கு பிழையெனில் இத்தவறுகள் நிகழும் வண்ணம் இவர்கள் நினைப்பினை இனியும் வழிவழியாய் வந்த பெண்நிலைச்சித்தரிப்பே வழிப்படுத்திடுமோ?

தமிழ் இயங்கிடில்!

தமிழ் என்றோர் மொழி தனியே மாந்த மொழி என எண்ணிடேன் தமிழ் உயர்வென்றோதியே வாழ்ந்திடில் மாந்தர் உயர்ந்திடுவர் எனக்கருதேன் தமிழ் என் தாய்மொழி எனக்கென்பதற்காய் மாற்றுமொழி பேசுவோர் என் சோதரர் எனக் கொண்டாட நான் மறுக்கிலேன் தமிழ் இதயத் திருந்து எழும் மாந்தரை தமிழரிலை என்று செப்புவாரை தூற்றிட தமிழ் என் தேசம் எங்கும் வாழ் சாதாரணர் மொழியெனும் மகிழ்வில் பூரித்திடுகின்ற என் இதயம் தமிழ் அந்தச் சாதாரணரின் மொழி எனக் கூவிட எங்கும் எதிலும் என்றும் எப்பொழுதும் தமிழ் இயங்கிடில் தரணியில் செறிவே!

புதுப் பயணமதில்..

போரில் கொள்ளைகள் என்றும் நடக்கும் போர் கொள்ளைக்காகவும் நடக்கலாம் போர் போரிற்காகவும் நிகழ்த்தலாம்  சுரண்டலும் ஊழலும்  சுத்துமாத்து பண்ணலும் அரண்டு ஓடிவிடுமோ  மிரழ்வரோ  ஆட்சி ருசியில்  பாராளுமன்ற  அரசியல் பண்ணும் பேர்வழிகள்.. தானே மாறும் என நினைத்திடில்  முடிவுறுமோ? பாராளுமன்ற வழிமுறைகள் பலித்திடுமோ போராடிப் பெறுவதுவே மக்கள் நலவாழ்வு! போரிட்டு தோற்பதுவும்  வெல்வதும் நிகழும் போர் போரை மேவும்  போர் போரால் வெல்லும் போர் அழிவில் பூரித்து மகிழ்வர் ஆழ்பவர்... எனில் எழுவரோ ஏதிலிகள் நனிபேருவகை அடைந்திட நலிந்தவர்க்கும் ஏது உண்டோ? சலித்திடவோ ஓட்டுபோட்டே... நாளை வேளைவரும்  அரசியல் நிலை உணர்ந்த மக்கள் திரள் வெகுண்டெழும்  புதுப் பயணமதில் வெகுஜனப் போராட்டப் பாதையதில் மக்கள் அதிகாரம் பெற்றிடில்  மாற்றம் நிகழுமே! 

மண்ணில் மாண்பு!

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் மாண்புகள் பெறலாம் மகிமை பெறும் சொர்க்கமும் மண்ணுலகிலேயே கிட்டும் மாந்தர் யார்க்கும் உரித்துண்டு மண்ணிலென வேந்தர் என எழுந்து நிற்கும்  முதலாளிய அதிகாரம் ஒழித்து  பாட்டாளிகள் எழுந்து நின்று கூட்டாளி என கூடியவரை இணைத்து சட்ட மறுப்பென கிளர்ந்து சனநாயகத் தேர்தலை ஒழித்து புரட்சிகர மார்க்கத்தில் மக்கள் அதிகாரம் பெற்றிடில் மாந்தர்க்கு உண்டு மண்ணில் மாண்பு!

காரணமின்றியோ?

கொட்டும் மழையில் என் தேசம் அழுகிறதே சட்டென காலம் மாறிய விந்தை இதுவே இயற்கை அறியுமோ இது நமக்கு இயலுவதிலையென பயிர் பச்சை பார்த்திட மழைவேண்டினமே பயிர் பச்சை மூடியே பாய்கின்றதே வெள்ளம் நாட்டிட முடியுமோ நமக்கிது வாய்ப்பென நாம்படும் துயருக்கு காரணமும் அறிவமோ வேதனைப் படுதற்கே மானிடப் பிறப்பெனவோ பூமியின் வெப்பம் மேவியதன் விளைவிதுவோ காரணமின்றியோ இயற்கையும் சீறுமோ அறிவீரோ?

படுத்திடுமினி கொடுங்கோல்!

ஏனந்த நாட்கள் மீண்டும் வருகின்றன வானத்தில் கூக்குரல்கள் மீண்டும் ஒலிக்கின்றன கானகத்தில் ஒப்பாரிகள் மீண்டும் கேட்கின்றன! கொத்துக்கொத்தாய் மனிதர் அழிந்திடப் பொத்தம்பொதுவாய் மனிதம் அழிந்தது சாத்தியமாகாதென சரித்திரம் எழுதியது! விடுதலைக்கான மார்க்கம் இழந்துநிற்க சடுதியில் நிகழ்ந்தன சதிவலைத் திட்டங்கள் கொடுமைகள் செய்தோர் மாய்ந்தனரில்லை! கொடுமைகள் அரங்கேறத் திட்டமிட்டாரையே விடுதலைக்கு துணைகேட்கும் நிலையாச்சு கேடுசெய்தாரை அண்டிவாழ காலமாச்சோ! இனிஎமக்கு இயலுவன எதுவெனத் தேர்வமோ தனித்தியங்கி தரித்திரம் போக்குவதுவோ சனிமாற்றம் வருமெனத் தான் காப்பதுவோ! ஒடுக்கப்பட்டவர் தேசங்கள் எழுந்திடவென விடுத்திடுவோம் ஒன்றுபட அழைப்புக்கள் படுத்திடுமினி கொடுங்கோல் ஆட்சிகள்! சென்ற வருடத்தில் முகநூலில் பதிவானது செம்மையாக்கத்துடன்

பிறந்த நாளாம் இன்று!

அன்று பிறந்தது அன்னைக்கு மகிழ்வு இன்று வாழ்த்திடும் உள்ளங்களுக்கு மகிழ்வு நன்று வாழ்ந்திடில் நலம் ஓம்பிட எனக்கும் மகிழ்வு நின்று உலகில் நீடு வாழில் குடும்பம் மகிழ்வு வென்று நின்றிடில் எந்தன் மண்ணுக்கும் மகிழ்வு தோன்றில் புகழெனில் சான்றோர்க்கும் மகிழ்வு

ஆழும் பரம்பரையுடன் கைகோர்த்து...

ஒன்றும் செய்வதற்கு முடியாது முனகிய பொழுதுகள் மறப்பமோ? ஏன் பிறந்தோம் என ஏங்கிய நாட்கள் ஏன் இந்நிலையில் தாழ்ந்தோம் எனத் தவித்த நாட்கள் ஒரு பொழுது நினைத்தோமோ தெரு வெங்கும் மனிதர் உயிர் காக்க ஓடஓட விரட்டவும் சுடவும் குண்டுமாரி பொழியவும் ஓங்கிய குரல்கள் ஓவென கத்தும் கணங்கள் யாரேனும் நினைத்தோமோ பாவப்பட்ட மக்களா அவர்கள் பஞ்சப்பட்ட மக்களோ அவர்கள் ஆண்டபரம்பரை மீண்டுமொரு முறை ஆழ நினைத்ததனால் மாண்டனரே... இன்றோ ஆழப்படுவோர் அனாதரவாய் அண்ட வெளி எங்கும் துண்டமாய் கிடக்க... ஆண்டபரம்பரை மீண்டும் எழுகிறது மீழ மீழ ஆழப்படுவோர் ஈய்கின்ற ஓட்டுக்கள் மூலம் ஒட்டுமொத்த மக்கள் சக்தியை உலகுக்கு காட்டி உலகை ஆழும் பரம்பரையுடன் கை கோர்த்து மேலும் மேலும் அடிமை மிடிமை நிலையில் மீளாது நாம் இருத்தற்கே! இது சென்ற வருடம் இதே நாளில் முகநூலில் எழுதிய கவிதை செம்மையாக்கத்துடன்

உடன்பட்டமோ? கடன்பட்டமோ?

ஏதடா, ஏதடா இந்த உலகம் ஏதடா ஏனினி நாங்க?  ஏனினி நாங்க?   சோலையுமில்லை, ஆலையுமில்லை காடுமில்லைக் களனியுமில்லை பாலைவனம் ஆச்சுது நஞ்சூறிய நம் நிலம்! நீரிற்கு காசு, சுவாசிக்கும் காற்றுக்கும் காசெனில் ஏழையர் பணமே போகுமே போகுமே பல்தேசிய கம்பனிப் பைகளும் நிறையுமே! ஆண்டவன் அருளை வேண்டி வர என்றே நாள்பல நமக்கு நாள்பல நமக்கு அட்சய திதியும் வளை காப்பு விரதமும் தீபாவளியும் கோயில் திருவிழாவும் கொண்டாடிட கொண்டாடிட போச்சு! பண்டம் பலவும் வேண்டிட வேண்டிட திண்டாட்டம் பணத்திற்கு வந்ததெனில் கடன்படு கடன்படு என காட்டினர் உடன்படு உடன்படு என பத்திரம் கேட்டனர்! விட்டு விடுதலைஆவதற்கு வழியிலை. பொல்லா நிலை போயகலப் பாத்திருக்க நல்வாழ்வு வருமென நாலு திக்கும் வரவேற்க வரி பெருக வரி பெருக வசூலாகும் வசூலாகும் பரிவும் இல்லை பண்பும் இல்லை தெரிவு உண்டு தேர்தல் உண்டு தேயத்து மக்களுக்கு தேர்வதற்கு வழியுமுண்டு பல் தேசிய கம்பனிகள் நல் உற்பத்தி செய்திடுவர் பெறுவதற்கு ஏதுமில்லை தடைகள் இங்கு பல்கிப் பெருகிட மூலதனம் அவர்க்காகும் பட்டினி கிடந்தேனும் நுகர்வுக்காய் நாமிழப்போம் தவணைக் கட்டணத்தில் தரம்மிக்க பொருட்கள் பூச்சிய வட்டிய

நிலைக்க செயவமே !

தாள் வீச தலை யெடுப்பாரே பலர் கோள் மூட்ட கோஷ்டி கட்டிட வேள் என்றே எழுவர் எங்கும் வாள் வீச்சே பேச்சாச்சு இன்றே பாழ் ஆச்சே பண்பு போச்சே என கொள்கை நின்றார் முறை இடவே இளஞ்செழியன் நீதிபதி நீட்டும் கரங்களை இறுகப் பற்றி நிலைக்க செயவமே அமைதி!

ஏந்திடும் கரங்களுக்குள்...

நீதியென ஒன்று நிலைக்குமென்று யார் சொன்னது சேதியிது புதினமன்று செய்வதற் கொன்றுமில்லை நாடிநிற்க எமக்கே நல்லார் இலையெனில் தேடிநிற்க மானிடர்க்கு மார்க்கம் ஏது கண்டீர் வாடிநிற்கும் மாந்தர்க்கு அறியாமை உள்ளவரை... பாடிப்பரவியே நிற்கும் பண்படா நிலையினில் ஏந்திடும் கரங்களுக்குள் மாற்றத்திற்கான மாற்றுவழி..?

விடை கிடையா வினாக்களோடு!

மனம் இறுகிய கணங்களில் மலருமோ எங்கள் இதயம்? மடிந்தவர் முகங்கள் எங்கள் மனவெளி எங்கனும் வீழ்ந்தவர் நினைவினைச்  சுமந்திடும் கணங்கள் ரணங்களாய் நினைவுகள் நிகழ்ந்தன எல்லாம் நிதமும் நினைவுகளாய் வதைக்கும் நிமிடங்கள் நிம்மதி குலைக்கும் கேள்விகள் இனி... இழப்பதற்கு எமக்கு இருப்பது எதுவோ? கனிந்திடுமோ எனும் கனவினில் எமக்குள் ஏன் கூவல்கள்... அடுத்துக் கெடுத்தவர் பக்கம் பாப்பர் என்றும் தொடுத்து போருக்கு துணைநின்றவர் துயர் தீர்ப்பரென்றோ தொலை தூரத் தேடல்கள்... விரிந்து கிடக்கும் பூமிப் பந்தில் விடை கிடையா வினாக்களோடு நடையினைத் தொடர்ந்திடும் நடைப் பிணங்களாய் நாங்கள்... மானுடம் தளைக்கும் பாதையில் ஏனுடன்பட இன்னும் தயக்கம்?

பட்டறிவு பெற்றோமென!

வேளாண்மை வீடு வந்து சேர்ந்திடில் வீடெல்லாம் நிறையுமே மகிழ்வு மலர்ந்திட! பாடான பாடு பட்டுலைந்திட  என்றும் நாடாதே நமக்கென்றும் நயங்கள் சேர்ந்து... சேராதே சிறுபிள்ளை வேளாண்மை சிறந்து தேரோமோ இனியேனும் பட்டறிவு பெற்றோமென ஓர்ந்து, உணர்ந்து, அறிந்து, தெளிந்தே சேர்ந்தால் ஜகமெங்கும் வியக்குமே நிமிர்ந்து!

அறிவு நிறைந்திட!

மன்றத்து நூலகத்தில் மனதாற இருந்தேன் என்றென்றும் எனக்கிது சொர்க்கம் என்பேன் தொன்று தொட்டு தமிழ் வளர்ந்தவாறு கண்டேன் நன்னெறி நம்மண்ணில் நடந்தவாறு உய்த்தேன் சென்னெறியை சேமமுறச் செய்திடும் என்பேன் இன்புற யார்க்கும் இயலுமாறு இருக்க செய்திடத் தோன்றிடும் போதினில் அன்னை தமிழே! அன்புற யாவர்க்கும் அறிவு நிறைந்திட  என்றும் தாய்மொழிக் கல்வியே திறமென்பேன்!

பகுத்து உணர்ந்திடில்...

பழயன தருவது பயனெனக் கொள்வதோ? பழமை கசந்திடப் புதுமை வேண்டிடுவர் புதுமை கசந்திடப் பழமை புதுக்குவர் பழமைக்குள் உள்ளன அறிவின்ஆணிவேர் பழயன கழிந்திடப் பற்றியன பெற்றிடுவர் பகுத்து உணர்ந்திடில் மணிகள் பெறுக்குவர் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே பண்பெனவே!

சட்டம் இலையேல்?

யாழ் மண்ணே இன்றேனோ இவ்வாறாய் ஆனாய் யார் இந்த நிலைக்காளாக காரணமும் என்ப யாதொரு சிந்தை இன்றி போதைக்கு ஆளாமோ யாபேரும் உணரா நிலையில் இதுதான் பாழாமோ யாழ் மண்ணின் புதல்வர்க்கு பண்பு  இலையோ யார்மீதும் குற்றம் சுமத்தியென் சட்டம் இலையேல் யாராண்டு என்பயன் எனத்தான் கிடப்பமோ யாழ் மண் போதைக்கே இலக்காகி இருக்குமேல்?

குளிர்காற்றும் உட்புக!

வான்முட்ட வளர்ந்த அரச மரம் எங்கே? வாழைமரமும் வளர் வாகையும் எங்கே? தேன்சுவைதரும் மாங்கனி தரு மரம் எங்கே? தென்னை பனை கருவேம்பு தானெங்கே? தேக்கும் பாக்கு தரு கமுகும் எங்கே? வேம்பும் முருங்கையும் தேடற் கரிய செம்பழந்தரு மாதுள செடியும் எங்கே? ஆவலைத்தூண்டும் நாவல் மரம் எங்கே? சுளை சுளையாய் பழந்தரு பலாமரம் எங்கே? விளாத்தியும் இலுப்பையும் போயொழிந்ததும் எங்கே? மரஞ்சூழ் முந்தையர் நிலம் நாலாய் பிரிபட மண்குடிசை இருந்த இடம் மறைந்திட எண்ணரிய மரம் சூழ்ந்த நிலமதில் எத்தனை வீடுகள் எழுந்தன நெருங்கியே... எப்படி குளிர் காற்றும் உட் புக இயலும் சுட்டெரிக்கும் வெயிலைத் தூற்றி ஏதுபயன்?

சேமம் பெறுவமே!

வேல் எழுந்தது வெல்வது உறுதி மேல் கிழம்பும் மேவி உயர்ந்திடும் பொல் லாப்பு போக பொக்கிசம் பெருகும் வல்வினை ஆற்றிட வளம் சேர்க்குமே மல்லுக்கு நிற்பாரை மனந் திருப்புமே கல் என எமக்கு சொல்லி நிற்கும் நல் வாழ்வு நமக்கென தந்திடும் பல் ஆண்டு நமக்கு அருள் தந்திடும் செல் நெறிக்கு துணை நிற்கும் நெல் விளைந்திட சேமம் பெறுவமே

பொதுமை பொங்கிட!

இரவில் ஒளிபரப்பும் இங்கிதம் எங்கும் இயலும் உலகினில் அன்பு நிறையும் கனவு மெய்ப்படும் கருத்து நிலைக்கும் விளக்கம் கிடைக்க விருப்பு வந்திடும் துலக்கம் ஆகிடப் புதுமைகள் நிகழும் நம்மண் இதுவென நமக்குள் பெருமிதம் நாடியன எல்லாம் நல்லன என்றிட தேடியன தருமே ஆனந்தம் என்றுமே! பாடிப் பரவிட பற்பல பண்புகளே பொதுமை பொங்கிட அனந்தம் இனங்களே!

மாறோமோ, மாற்றென்றே!

நஞ்சென உணவென நவில்வர் அறிவோர் நஞ்சை புஞ்சை எல்லாம் நாசமாகப் பயிர் பச்சை எங்கும் நச்சுக் கலவை... தாய்மை உற்றவர் உணவே நஞ்செனில் தாய்மை தரும் தாய்ப்பால் நஞ்சேயாம்! மரபணு மாற்றப் பயிர்ச்செய்கையெனெவும் செயற்கை உரமெனவும் கிருமி நாசினி எனவும் மரபாய் அமை இயற்கை வேளாண்மைக்கு மாற்றெனில் தாய்ப் பால் அமுதென வாய்க்குமோ குழந்தைகட்கு! மாறோமோ, இயற்கை வேளாண்மையே மாற்றென்றே!

கோர்க்காரோ கைகள்!

ஆணாதிக்க காவிகளாய் அன்றுதொட்டுப் பெண்கள் தோணாதே இவர்க்கு தமது அடிமை நிலையது? வீணான   வார்த்தை வீச்சினையே வீசிடுவர் பண்பென்று கொள்வன பாழவர்க்கே என்றெண்ணார் பதிவிரதை எனவும் பத்தினி எனவும் கொள்வர் மதிகொண்ட மங்கையராய் திகழ்ந்திட முயன்றால் கூசாமல் வேசையென மொழிதலை செய்வர் கூற்றொன்று கூறினால் அடங்காப்பிடாரி என்பர் அடுத்தவரை ஆட்டக்காரி எனவும் நவில்வர் விடுப்புநிலை விட்டுச் சிந்திக்க முயலாரோ தொடுக்காரோ தோழரென கோர்க்காரோ கைகள்?

சிறுபராயம்..?

நாளைய தலைமுறை நாடி வந்தனர் கோளையர் இலையென காட்டி நின்றனர் வேளை இதுவே விதைப்பதற்கு ஆனது இளைய பருவம் அறிதலுக்கு ஆனது பொது உடமை தத்துவம் அறிந்திடில்  அகிலத்தை மாற்றும் பக்குவம் அடைவர்.. சிறுபராயம்..?  சமூக அக்கறை விதைப்பில் உறுதிபடைத்து உன்னதம் நிகழும் தானே!

ஆதிக்கம் எதிர்த்தே..

ஆதிமுதல் அடிமையாய் அல்லல் பட்டவர் மேதினத்தில் எழுந்து குரல் கொடுத்து நின்று நீதிநெறி சமத்துவம் காத்து நிற்க வென்று வீதிவழி நீண்ட நெடு ஊர்வலம் சென்று சேதி சொல்லி நிற்பர் அடங்கிடோம் என்று... ஆதிக்கம் எதிர்த்தே மக்கள் அதிகாரம் பெறுவர்!

மண்ணினில் மக்கள் அதிகாரம்!

எட்டு மணிநேர வேலையினை இயலுமாக்கிய சட்ட முறையை கொண்டுவந்த தொழிலாளர்  போராட்ட பாதையது தொடரல் வேண்டும் தேரோட்டி வாழ்ந்த காலம் போச்சுதென நேர்நின்று ஆட்சி அதிகார வர்க்கம் ஒழித்து பாராட்டும் வண்ணம் பாட்டாளி வர்க்கம் எழுந்திட பாரெங்குப் புதிய ஜனநாயக புரட்சி வழியில் மலர்ந்திடும் மக்கள் அதிகாரம் மண்ணினில் என்போம்!

வசதிக்குள் வாய்ப்புகள்?

வர்க்க வேறுபாட்டில் தர்க்கம் எழுந்திட வர்க்க ஒன்றுபடலில் போராட்டம் எழுந்திட வெற்றி பெற்றுடுவர் என்பதனால் அன்று வேற்றுமையை மொழியால் உருவாக்கி நின்று முதலாளியம் வளரும் மார்க்கங்கள் கண்டனர் இன்றோ.. இனவேறு பாட்டில் தேசியம் வென்றிடா தழித்திட இரட்டைத் தேசியமாய் தமிழர் பிழவுபட முதலாளியம், நவதாராளம் முதன்மை பெற்றிட இதனால் இது நிகழுமென எண்ணிட முடியா வசதிக்குள் வாய்ப்புகள் வந்ததனால் பேச்சாச்சோ?

சொல்லிட முயன்றிடில்!

வேதத்தில் தொழில் நுட்பம் இருப்பதாய் பிதற்றுவதும் இதிகாசத்தில் விமானத்தில் பறந்ததாய் பிரமிப்பதும் வாதத்திற்கு கற்பனையில் கண்டதை மொழிவதும் வாக்கினில் மொழிவதை வியக்கின்ற வகைகளும் தேக்கத்தை ஏற்படுத்த திட்டம் எனத்தான் எனக்கது தோன்றுவதை சொல்லிட முயன்றிடில் எனக்கென்ன சான்றுதருவரோ யாரும் சிந்தனைச் செம்மலென!

இன்புறு நிலையில்...

இந்நிலம் மழலைகள் மகிழ்வில் மலரும் இன்புறு நிலையினில் குழந்தைகள் வளர்வர்... இது நிஜமெனில் எமக்கும் இயலுமா? இனி நமக்கிது புரிந்திடக் கூடுமா? இதயம் தருவோம் குழந்தைகளுக்கு என இயம்பிடும் காலமும் நமக்கு வந்திடுமா? இருக்கும் வசதிகளை வாய்ப்பாய் கொள்ளுவமா? இனி நமக்கென நாமே அரசெனப் புரிவோமா?

உன் அகத்தைத் தேடி!

என்ன நினைத்து எனை படைத்தனை? என்ன எண்ணி எனை விதைத்தனை? முளைவிட்ட எனது வளர்ச்சியில் மூர்க்கத்தை ஏன் தந்தனை? ஆர்க்கும் அடங்கா இயல்பினை ஏனோ தந்தனை? நேர் நின்று எதிர்க்கும் உணர்வை எனக்குள்  ஏனோ விதைத்தனை? சொன்ன மொழியுள் சிந்தை விட்டே இன்னும் இன்னும் ஏனோ எனை எழுதத் தூண்டுறாய்! எனை ஈன்ற என் தாயே? எனக்குள் நீயே எனிலும், எங்கு எங்கு நீயென எல்லார் முகங்களிலும் உன் அகத்தைத் தேடி நகர்கின்றேன்... நாட்கள் நகர்ந்திட!

தெரிவுகள் வருமென!

வானம் இரவில் கொட்டித் தீர்க்கின்றது வளம் சுரக்கும் பூமி மகிழ்கின்றது வள்ளண்மை கொண்டோர் பூரிக்கின்றனர் கொள்கின்றேன் நானும் நல்மனதினோடு தெள்ளத் தெளிவாய் தெரிய வானம் ஒளிவெள்ளம் வெளியெங்கும் நிறைகின்றது குளிர்கின்றது என்பாதம் நடைபயில்கையில் தெளிகிறது மனம் தெரிவுகள் வருமெனும் மகிழ்வினில்! சென்ற வருடத்தில் இந்த நாளில் முகநூலில் இன்றோ கோடை வெயிலின் கதகதப்பில் நன்றே பெயுமா சித்திரைச் சிறுமாரி!

விருத்தி பெற்றிடலாம்!

ஒருவரை ஒருவர் சந்தித்திடும் நேரங்கள் விருப்பத்தின் தருணங்கள்  ஒட்டுற வாகிடுதலில்... ஒருபோதும் அடுத்தவர் அந்தரங்கம் தேடாதீர் விருப்போடு குசலம் விசாரித்து மகிழ்வீர் விருந்துண்டு அருமந்த காலத்தை அனுபவிப்பீர் கருத்து ஒருமிக்க ஒற்றுமை உருவாகிடும் விருத்தி பெற்றிடலாம் நெருங்கி வந்திடில்!

சுரண்டலின் உச்சமோ?

வாடிக்கையாளர் நலனெனச் சொல்வதும் வாடிக்கையாளர் திருப்தியென மொழிவதும் வாடிக்கையாளரே எசமானர் என நவில்வதும் ஏனென்று ஆராயுங்கால் தேர்வரே யாரும் முதலாளிய முதன்மையே அர்த்தம் எனவே! திருப்தியே சுரண்டலின் உச்சமோ, அறிவரோ?

பூரணம் அடைந்திட

புத்தக தினமா இன்று மாந்தர் புத்தியைத் தீட்டும் தினமா ? புதியதை அறிந்திட நாமும் புத்தகம் திறந்தே பார்ப்பம் புரிந்திடத் தெளிந்தே நிர்ப்போம் புரிய வைத்திட முயல்வோம், பூரணம் அடைந்திட அஃதே வழியென!

மாற்றம் பெற்றிட

ஏமாத்து சூதுவாது வஞ்சகம் எல்லாம் ஏழையர்க்கு எதிரானது ஆகும்- நாளை ஏழையர்க்கு ஆனநல் பாதையில் பயணம் கோழையர் இல்லை என்றிடும் வண்ணம் வாழை மாவிலை தோறணம் எங்கும் வாழ்வில் மகிழ்ந்து கொண்டாடி நின்றிட ஏற்றம் வந்திட வேண்டும் எல்லோர்க்கும்! மாற்றம் மண்ணுலகில் பெற்றிட எழுந்திடுக!!

பூக்கும் புதுயுகம்

மக்கள் அதிகாரம் வெல்லும் மார்க்கம் செக்கச் சிவந்த மார்க்சிய பாதையே தூக்கிய அரிவாள் சுத்தியல் கொண்டு ஆக்கிய அரசின் செங்கொடித் தலைவன் பாக்கும் இடமெலாம் லெனின் படங்கள்... நோக்கு கொண்டே கூடிடும் தோழர்நாம் பூக்கும் புதுயுகம் என எழுந்தோம் வாரீர்!

பாரதிதாசன் பாட்டெடுத்து...

பாவேந்தன் பாரதிதாசன் நினைவு தினமதில் பாருலகில் தமிழ் முழக்கம் செய்குவோம் நாவெல்லம் நவிலும் தமிழ் எங்கும் என்போம் நாடறிந்த கவிஞன் புகழ் இணையத்தில் பரப்புவோம் பூவுலகில் சமத்துவம் சாத்தியம் என்போம் பூரித்த வாழ்வு சித்திக்க வழி சமைப்போம் புதியதோர் உலகம் செய்தே சிறப்போம் பாவேந்தன் பாரதிதாசன் தமிழ் பாடல் நயக்கவே!

பெண்ணே உயர்வு அறிக!

பெண்ணிற் பெருந் தக்க யாதுள பெண்ணைப் பேணுவது பெருமை என உணர்க பெண்ணை உயர் நிலையில் வைத்திடுக பெண் நிகர் ஆணுக்கு என உணர்க பெண்ணொடு பேசிடில் பேறு என எண்ணுக பெண் அறிவின் வெளிச்சம் என அறிக பெண்ணே சக்தியென மொழிக பெண்ணே ஆற்றல் என விளம்பிடுக பெண்ணால் உயர்ந்தோம் என இயம்பிடுக

வேண்டும் நினைவுகள்

வேண்டாம் என ஒதுக்கிலும் மீண்டும் மீண்டும் மனக்கதவை தட்டும் நினைவுகள்., கொண்டாடிக் களிக்க  முடியுமா இன்று? நாளைய கருமத்தை கருதி நித்திரை வேண்டியே என் கண்கள் தவமிருப்பினும் நினைவுகள்  தாண்டி என் மனமதில் வேண்டுதல் செய்வது ஏன்? கால ஓட்டத்தில் கரைந்துபோன இளைமை போல் இழந்து போவதில்லையே நினைவுகள், இன்று நிலைப்பன  இன்பம் இலையெனில்!

பாவலன் ஆகிடுவேனா?

பாரதி வழியில் பாவலன் ஆகிடுவேனோ? பாலகர் முதல் பாட்டன் வரையில் பாடிடப் பாரதி பாட்டெ ழுதினான், பாவினில் இலயித்த நானும் எழுதினேன்.. பாவாய் அன்றிக் கவியாய் ஆயிற்றே! பாட்டு எனக்கது சித்திக்க வில்லையோ? பாரினில் முயன்றிடில் பாவலன் ஆகிடுவேனா? பாதையும் திறக்குமோ பயணம் சித்திக்க!

மனக்கதவு திறக்காரோ

சிலைகள் செதுக்கியே மலைகளில் வைப்பர் சீரிய வகையில் கோயில்கள் புதுக்குவர் அலைகள் இரசிக்க மாளிகை செய்வர் ஆலயம் அமைத்து ஆனந்தம் அடைவர் கலைகள் வளர்த்திட கருணை காட்டுவர் கலாசாரம் காத்திட மண்டபம் எழுப்புவர்.. மலையக மக்கள் மண்சரிவில் மாண்டால் மனக் கதவுகளை திறக்கவும் மாட்டனரோ? சென்ற வருடத்தில் எழுதியது

தியாகத்திற்கோர் சிறப்பு

தியாகம் போற்றுதற்குரியது, தியாகம் ஏற்றுதற்குரியது! மயானம் ஒன்றில் உறங்குதற்குதானா தியாகிகள் ஆயினீர், மயானம் ஒன்றேதானா உங்கள் இலக்கு? வானில் ஒளியாய் ஒளிர்ந்து ஏன் மண்ணில் வாழும் மனிதர்க்கு மகிமைகள் செய்திட முயன்றிடீர்! எண்ணில் எமக்கு இயலுவது எண்ணரிய பணிகள்... நீவிர் ஏனோ  மயானத்தில் துயில்தற்காய் மண்பரப்பை வேண்டுவீர்? வேண்டாம்! இன்னுயிரை தியாகம் செய்த உங்களின் பெயரால் வன்னியில் உள்ள உங்கள்  கனவுகளின் மாந்தர் எழுந்திட வாழ்ந்திட,  எழுச்சியுற மாண்புற, இயன்றன ஏதும் செய்திட கேளும்  தியாகத்திற்கோர் சிறப்பு அஃதே என மொழிவீர்!

கசகரணம், விடமேறிய கனவு- விமர்சன அரங்கு | நீள்கரை

கசகரணம், விடமேறிய கனவு- விமர்சன அரங்கு | நீள்கரை

விளங்கும் மேன்மை

பலனற்றன பயனென கருதினம் நாமே குலவேறு பலகூறி கூறுகள் செய்தமே! கலங்கரை விளக்கம் கல்வி என்பதுவே நலங்கள் பலவந்திடும் அறிவு மிகுந்திடில் துலங்கும் ஞானம் பூரணம் தந்திடும் விலங்கு மனம் போய் விளங்கும் மேன்மை கலங்கும் நிலைபோய் கலைந்திடும் துன்பமே!

தொன்றுதொட்டு...

பண்பாடு, பண்பாடு எனத்தான் கூப்பாடு போடுவார் கண்டாரோ, கருதினரோ, ஒழுக்கத்தில் நின்றாரோ, எண்ணினரோ, ஏற்றனரோ குவலயத்தில் பண்பினை! எல்லோரும் ஏற்றிடும் நாகரிக உடைகளேயே எதிர்ப்பதுவே தம் பண்பாட்டின் ஈடுபாடெனக் காட்டி மொழிந்திடுவர்; ஏற்பர்  அறவோர் என்பதனால்! நன்றே உடுத்து வரினும்  தொன்றுதொட்டு காலம், இடம், சூழல் கருதா வகையினில் அணிந்த ஆடையே ஏற்பதுவே தகுமென எவ்வாறோ பண்பாட்டை பறைதல் இயலும்?

அன்னையை நினைந்து..

நிலவுக்குத்தெரியும் நின் அன்பு நிலவின் குளிர்மையின் உன் அரவணைப்பு நிலவை எனக்கு காட்டி நிதம் கதைகள் சொன்ன அந்தக் காலம் உலவும் ஞாயிற்றொளியில் நிலவு ஒளிர்வதாய் நீ எனக்குச் சொல்லித்தந்த காலம் மலரும் பருவத்தை எனக்கு மனதில் பதித்திட சொன்ன காலம் பெண்மையின் கருத்தை எனக்குள் பொங்கிடச் செய்த காலம் பெண் படும் துயர்களை எனக்குள் எண்ணிட நீ வைத்த காலம் பெண் இன்னல்களை எனக்குள் விதைத்துச் சென்ற காலம் எழுத எனக்குள் சிந்தனையை எழுப்பி விட்ட அந்தக் காலம்... காலம் மீளாதோ என இந்தக் காலம் ஏங்கித் தவிக்கின்றேன். இயலுமோ உனது காலத்துள் நான் சென்றிட இயலுமோ உனக்குள் நான் கரைந்துவிட! நீ இல்லாத இந்த நாட்களுள் நான் என்னையே இழந்துவிட அன்னையே உன்னைத் தேடியே நாட்களின் நகர்வுகள்! இன்று  எனது அன்னை சிவகெங்கா பிறந்த தினம்

புலவர் கவிதைகள்: கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் ...

புலவர் கவிதைகள்: கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் ... : கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே! ஓட்டினி கேட்டவர் வந்திடுவார் –மேலும் ஒருசிலர் நோட்டினைத் தந்திடு...

ஆணுக்கும்....

பெண்ணினைப் போற்றும் காலம் வந்தது என்போம் பெண்களின் உரிமைகள் பெற்றிடத் துணிந்தோம் அரிவையர் தெரிவையர் எல்லாம் கூடிடுவோம் ஆணுக்கு நிகர் பெண் எனில் தாலி தவிர்த்திடுவோம் பெண் மணமுடித்ததற் கடையாளம் வேண்டுமெனில் ஆணுக்கும் சரிநிகர் அடையாளம் வேண்டுமென்போம்... எண்ணம் கொண்டே எழுதிடில் அரிவையர் உரைப்பர் அணிகலன் என்பதாய் தாலியின் மகிமை ஆயிற்றென! சென்ற வருடத்தில் எழுதியது சிலதிருத்தங்களுடன்

வீசிடமுடியா வலைக்குள்

நுகர்வுக் கலாசாரம் நுகத்தடியாய்... நகர்ந்திடும் நாட்களைத் தின்னும் நமக்கென ஓர் நாளெனச் சொல்லும் நமக்காய் தானென நவிலும் நமைச் சுற்றியே வலை விரித்திடும் நகர்வுகளை நாம் தவிர்த்திடிலும் நமைத் தேடி அகத்தினில் வந்திடும் நன்றென ஏற்றிட பழக்கியே விட்டிடும் நுகர்வுக்கு ஒப்பிய மனமது சிறைப்படும் நுகத்தடி வீசிட முடியா வலைக்குள்! நுகம்பிரட்டி எனநாம் எழுந்தால்...?

புதினம் பறையவோ?

மதிப்பு உள மாண்புடை வாழ்வில் எனில் விதிமாறாய் உள்ளன செய்தியாய் ஓதிட வந்தவிடத்து மாறுபாடாய்... மாணவனை மணாளனாக்கிய ஆசிரியை என! பதியடையப் பலதடைகள் பண்ணி வைத்தனர் பாவையர்க்கே... எதிலும் எப்படியும் எவ்வகையிலும் எண்ணம் செலுத்திடில் மேன்மை உண்டாமோ? பதிலும் வருமே பண்பிலை என்று விதிவசமே வாழ்வென விட்டு விடுதலுமோ புதுமையோ எனப் புதினம் பறையவோ கதியோ சகத்தினில் தர்மம் ஆகுவதோ!

அம்பேத்கரின் முதல் நூல்

அம்பேத்கரின் முதல் நூல் : அம்பேத்கர் ஒரு அரசியல் செயல்பாட்டாளர் மட்டுமல்ல. அவர் காலத்து தலைவர்களில் அதிகம் எழுதியவர்.

கடன் சுமையில் தத்தளிக்கும் நாடுகள்

கடன் சுமையில் தத்தளிக்கும் நாடுகள் : கீரிஸ் நாட்டை விட ஜப்பான் அதிக கடன் சுமையில் இருக்கிறது. அமெரிக்கா தனது ஜிடிபியில் 104.5 சதவீதம் கடன் சுமையில் இருக்கிறது.

இன்று உலக சித்தர்கள் தினம்: இந்திய முறை மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? - விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை

இன்று உலக சித்தர்கள் தினம்: இந்திய முறை மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? - விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை : உலக சித்தர்கள் தினமான இன்று இந்திய முறை மருத்துவத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

தந்தையே அவர்!

படம்
பெரியார் போலும் யாருளர் புரிந்திடக் கூரிய கருத்தினை நேரிய வகையினில் கூறி ஆரிய மாயையின் வேரினையே பிடுங்கியே  தெரிய யார்க்கும் பகுத்தறிவை ஊட்டி சீரிய நெறியினை வகுத்து தொகுத்துப் பாரினில் ஒப்ப பாமரரும் வாழ தத்துவம் வாரி வழங்கிய ஓரியல் தந்தையே அவர்!

நாமும் மகிழ்ந்திட..

படம்
இன்று எமக்கு விடுமுறை என்றதனால் நேற்றும் விடுமுறை என்றதனால் நாளையும் விடுதலை நம்நாட்டரசு அறிவிப்பு நயம் நமக்கே விளைவது என்றதனால் இந்து பௌத்த புதுவருடம் தனையே தமிழ் சிங்கள புத்தாண்டு என்று ஏற்றிட யாவரும் நற்றமிழில் வாழ்த்திட வாழ்த்துவம் நாமும் என்றும் போலின்றும்... ஓய்வும் ஒன்றிய மகிழ்வும் வேண்டுவதே!

இலையென எழுந்திடில்...

இரவின் முடிவே விடிவாம் இன்பம் துன்ப முடிவாம் இயலும் வாழ்வின் சுமைகள் இறக்கிட வகைகள் காணல்... இரத்தம் சிந்திட நிலையாமோ? இதயம் அற்றவர் தருவரெனில் இரங்கிய போதில் பெறுதல் இனியும் இலையென எழுந்திடில்... இறவாப் புகழொடு வாழ்வம்!

கருத்தொருமிப்பே நல்லறம்!

வணக்கம் என்பதை சுணக்கம் இன்றிக் கூறுங்கள் வந்திடும் இன்பம் வார்த்தை கேட்டிடும் போதினில் கும்பிடுறன் சாமி எனக் குனிந்த காலம் போயிற்று சமத்துவ உணர்வுடன் தமிழன் தலை நிமிர்வான் சரிநிகர் மகளிர் ஆடவர்க்கு என்றிடில் பண்பது இணையராய் இல்லறம் தொடங்குதல் ஆகுமால் இனியுமேன் தாலியது அடிமைச் சின்னமாய்! கைத்தலம் பற்றிடக் கருத்தொருமிப்பே நல்லறம்!

மத மேன்மை இதுவோ?

மானின் அழகினில் மயங்கினளோ சீதை மானின் கறியமுதை விரும்பினளா சீதை காட்டுவழி பதினாலு ஆண்டுகள் இராமன் வேட்டையாடி உண்டு மகிழ்ந்த புலாலோ..? நாட்டுப் புறத்து நாங்கள் சத்துணவாய் உட்கொண்டால் சட்டம் போட்டு தடுப்பதுவோ? வேற்று நாட்டிற்கு ஏற்றுமதி ஆகுதாமே! மாட்டின் இறைச்சி வேற்று நாட்டிலிருந்து ஆக்கி இறக்குமதி ஆகிடில் ஏற்பராமே? வியாபாரமே கருத்தினில் இருக்கும் நோக்கெனில் வெட்கம் மத மேன்மை எனக் காட்டல்!

இரண்டு நாவல்கள் விமர்சன அரங்கு

படம்

படைப்பன எல்லாம்...

தடைபல தருவது நடைபெறு நிலையினவே கொடை கொள்ளற்க கொள்கை வேறுபடின் கோடை வெய்யில் கொளுத்துகையில் உடை மாற்றுதல் இயல்பின தாகுமே சாடை மாடையாய் சங்கதிகள் பிழைத்தால் விடை கொடுத்து வினையினை மாற்றுடுக படைப்பன எல்லாம் சிறப்பன இல்லையே

பல்லோர் ஏற்ற...

எல்லோரும் தம்மை நல்லவரென எண்ணுவதோ பல்லோரும் ஏற்றும் பனுவலையே பாடுவதோ நல்லவர் அல்லவே நாகரிகம் நவில்பவர் சொல்லொன்று செயல் ஒன்றாய் வாழ்பர் தொல்குடி மரபென்று வீறாய்ப் பாய்வர்... நல்நெறி நாட்டிட யாவரும் கேளிரென ஒல்காப் புகழ்நெறி நாடிடில் இயலுவதே பல்லோர் ஏற்றப் பண்பாடு மிகுந்திடுமே!

கூடியுண்ணில்..

உண்மைகள் புலப்பட இனமுரண் இடையூறாய் எண்ணுவ தில்லை இயலுவ தொன்றினை சட்டத்துக்கு புறம்பெனில் இயற்றிடல் அதிகமென இட்டத்துக்கு போக்குளை இலக்கினதாய் ஆக்கிடில் ஆபத்து நிறைந்துள அறிந்திலர் பேராசையினால்.. கோபத்தில் கொப்பளித்து மோதுவதோ சாவதுவோ கஞ்சி குடித்திடினும் கூடியுண்ணில் சுவை உளவே!

நிலைத்திட!

எண்ணுக என்றும் நல்லன தெளிவுற ஏளனம் செய்தல் ஏற்றதென கொள்ளில மண்ணுலகு மாண்புற மார்க்கம் காணுக மதித்திட வாழ்வில் மாற்றங்கள் செய்க திண்ணிய மனத்தொடு தினங்களை வெல்க திருப்திபெற தீர்வு தேடிடுக நிலைத்திட!