வியாழன், 29 நவம்பர், 2012
செவ்வாய், 27 நவம்பர், 2012
அந்த நாள் ஞாபகம்
முப்பது வருடங்களுக்குமுன்
எனது கிராமம் பற்றிய உணர்வு…
நான் இளம்பிராயத்தில் இருந்த
காலம் எண்பதுகள். அந்தக்காலம் தான் இலங்கையில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்திய
காலமாக இருக்கின்றது. அந்த காலத்தில் கிராமங்கள் அடைந்த மாற்றத்தை வெளிப்படுத்தும்
விதமாக நான் எழுதி அப்போது நாம் வெளியிட்ட சிறுசுகள் கையெழுத்து பத்திரிகையில் வந்த
கவிதை எனது ஊர் நண்பர்களினை கவர்ந்த ஒன்றாக இருந்தது. அந்தக் கவிதையினை நான் மட்டும்
வாசித்திடாது உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன். இது ஒன்றும் கவிதை என்று
சொல்லும் அளவுக்கு இல்லை. ஆனால் கொஞ்சம் உங்களை முப்பதுவருடங்களுக்கு முன் அழைத்துச்செல்லமுடியும்
என்ற முனைவில்தான்….
எங்கள் ஊர் முன்னேறி விட்டது
நெருங்கி அமைந்த
வீடுகள்
உயர்ந்து நிற்கும்
அன்ரனாக்கள்
நீண்டு
வளைந்து செலும்
றோட்டு
ஊர்ந்து செல்லும்
பேரூந்து
உல்லாச வாழக்கை
ஆம், எங்கள் ஊர்
முன்னேறி விட்டது.
மண்ணெண்ணை
குப்பிகளுக்கு பதிலாய்
இப்போதெல்லாம்
அறைக்கு அறை
மின் குமிழ்கள்
இன்னும்,
மின் அடுப்பு,
மின் காற்றாடி,
மின் அழுத்தி
என்று எல்லாமே
ஆளியைத் தட்ட
இலகுவில் கிடைக்கும்
ஆம், எங்கள் ஊர்
முன்னேறி விட்டது.
அன்று வேட்டியுடன்
திரிந்த நாம்
இன்று சரம் அணிந்து
செல்கிறோம்
அன்று சேலை அணிந்து
திரிந்த நாம்
இன்று நவநாகரிக
உடை
அணந்து ஆடுகிறோம்
அன்று நடந்து
திரிந்த நாம்
இன்று துவிச்சக்கர
வண்டியில் ஓடுகிறோம்
ஆம், எங்கள் ஊர்
முன்னேறி விட்டது.
கோயில் திண்ணைகள்
இப்போது
பக்தர்களை சும்ப்பதில்லை
‘கடதாசிக் கூட்ட’
பக்தர்களையே சுமக்கிறது
விடிந்தால் இருளும்வரை
இவர்களுக்கு,
கடதாசியே உலகம்
வயிற்றுக்கு பசிகூட
வருவதில்லை.
ஆம், எங்கள் ஊர்
முன்னேறி விட்டது.
பத்தாம் வகுப்பு
படித்து முடித்தால்
உடனே வேலை வேண்டும்.
‘பாஸ் போட்’
‘ஏஜென்சி’
என்று அலைச்சல்
பஸ்ஸேறிப் பயணம்
பின் சிலநாளில்
பிளேன் ஏறப் பயணம்
ஆம், எங்கள் ஊர்
முன்னேறி விட்டது.
படிப்புத் தேவையில்லை
குணமும் தேவையில்லை
வெளிநாடு சென்று
வந்தால் போதும்
மாப்பிள்ளையாய்
வருவதற்கு
பெண்களிற்கு!
அதுவே போதும் தகுதி
ஆம், எங்கள் ஊர்
முன்னேறி விட்டது.
எங்கள் ஊரை
எத்தனையோ பேர்
திருத்த முயன்றனர்
பெரியவர்கள், இளைஞர்கள்
என்று பலர்
ஆனாலும்,
திருத்த முடியவில்லை
என்றாலும் எங்கள்
ஊர்
முன்னேறிவிட்டது.
1984
தோழர் மணியம் நினைவுநாள்
கம்யூனிஸ்ட் போராளி தோழர் மணியம் நினைவுநாளில் எழுச்சியுறுவோம்
அலையின் மோதல்
மணியின் நாதம்
புதியபூமி விடுக்கும்
அழைப்பு
தாவி ஒலித்து வரவழைக்கிறது
முன்னே செல்வீர் முன்னுற
விரைவீர்
மேலும் முன்னே சென்றிடத்
திரள்வீர்....
...........................................................................
பூமியின் அமைப்பைப்
புதிதாய்ப் புனைவோம்
புதுவரலாறும் நாமே
படைப்போம்
முன்னோக்கிய நம் பெரும்படை
நடப்பை
மலையும் வனமும் மறித்திட
மாட்டா
நான்கு திசையிலும் நமது
சக்திகள்
ராஜாளிகள் போல் சிம்மங்கள்
போல்
கள்வர் கயவர் கோட்டைகள்
கக்கும்
மக்கள் எதிரிகள் மாய்வதும்
உறுதி
முன்னே பாய்வீர், முன்னுற
விரைவீர்
புதிய பூமியின் வரவை
உரைப்பீர்
மணி ஒலி இசையும்
புதிய பூமியின் முரசின்
முழக்கமும்
எல்லாச் செவிகட்கும் எட்ட
எழுப்புக!
நன்றி: புதிய பூமி (1985)
வியாழன், 15 நவம்பர், 2012
செவ்வாய், 13 நவம்பர், 2012
தீபாவளி கொண்டாடப்படுவது..
தீபாவளி தமிழர் திருநாள் அல்லாவிடினும் பரவலாக தமிழ்மக்கள் கொண்டாடும் தினமாக உள்ளது. கொண்டாடும் யாரும் அதன் உண்மையான புராண கதைக் காரணத்தை வைத்து கொண்டாடுவதில்லை. அது ஒரு புதிய ஆடை புனைந்து மகிழும் சாதாரண அர்த்தத்திலேயே கொண்டாடப் படுகின்றது.
தீபங்கள் வரிசை என அர்த்தப்படும் சொல்லால் அறியப்பட்ட இந்த விழாவை நானும் சிறுவயதில் கொண்டாடியிருக்கின்றேன். எனது பள்ளிச்சிறாருக்கு தீபாவளி அட்டைகள் வாங்கி தபாலில் சேர்ப்பது வழக்கம். அப்போதெல்லாம் அது ஒரு பொழுது போக்காக இருந்திருக்கின்றது. அந்த அனுபவங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் தன்மையன.
அரக்கரை அழித்த தினம் எனக்கொள்ளப்படும் விழாக்கள் தமிழில் நிறைய இருக்கின்றன. சூரன் போர் போன்ற பல உண்டு. அரக்கர்கள் என அன்று அழைக்கப்பட்டவர்கள் திராவிடரே என்றால் நாம் அத்தகைய விழாக்களை கொண்டாடுவது சரியா என்பது தான் கேள்வியாக இன்றுவரை இருக்கின்றது.
ஞானிகள் அவதரித்த தினங்களைக் கொண்டாடுவது பிற மதத்தவர்களின் பண்பாடாக இருக்க இந்து மதத்தவர்களின் பண்பாடாக அரக்கர்கள் மறைவு நாளைக் கொண்டாடுவதாக இருக்கின்றது. இந்து மதம் ஆரியமயப்பட்ட மதமாக இருக்கின்றது என்பதனால் தான் இந்த இழிநிலை நேர்ந்திருக்கின்றது. தன் இனத்தவர்களின் அழிவையே கொண்டாடுவது எப்படி ஒப்புக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.இது அடிமைத்தனம் இல்லையா என்று கேட்கப்படுவதில் ஞாயம் இருக்கத்தான் செய்கின்றது.
சனி, 10 நவம்பர், 2012
உணர்!
உணர்!
-அழ. பகீரதன்
-அழ. பகீரதன்
ஈடேற்றம்
என்பதுவே
வழிபாட்டின்
நோக்கமெனில்
அழித்தொழித்தே மாற்றார்க்கு
ஆக்கினைகள்
செய்திடில்
எங்கனமோ
சித்திக்கும்!
இறையோடு
ஒன்றுதலே
மறைநாடும்
நம்விருப்பெனில்
இறையென
பிறரேற்றும்
தெய்வம்
உறைகின்ற
இல்லினை
அழித்திடில்
இறையொடு
இணைதல்
இயலுதல்
ஆகுமோ!
மானிடத்தின்
மேன்மைக்கு
வழிகோலும்
மதமெனில்
மானிடரின்
அழிவினில்
மதமேன்மை
நாட்டல்
எவ்வகை
சேர்த்தி!
பிரம்மமே
யாவுமெனில்
ஓரங்கம்
ஆன்மாவெனில்
அடித்து
அழித்து
ஒழித்து
ஏனிந்த
கூத்தோ!
வழிவேறாய்
ஆகிடினும்
சேருமிடம்
ஒன்றெனவே
தேருவர்
எனில்
கூறுகள்
அகற்றிட
பொதுமை
இயலுமே!
-1994
புதன், 7 நவம்பர், 2012
சிங்களத்துக் காதலியே…
சிங்களத்துக் காதலியே…
நெஞ்சம்
நெகிழ்ந்து
நேசம்
மிகுந்து
வந்த
தனால்
சொந்தமாகிப்
போனவளே,
இந்த
நிமிடம்
வரையில்
இடைவெளி
நமக்குள்
இருக்க
காரணம்
என்ன?
படைகள்
தானோ
நமக்குள்
தடைகள்
அமைத்தன!
எனில்
பகைமை
நம்மினத்திடை
எழ
ஏது
எஃது?
புரிந்துணர்
வின்றி
‘விரித்துரைத்த
செய்திகளை
நம்பியதால்
தானோ
நம்மினமும்
நும்மினமும்
எதிரெதிராய்
போயின!
ஓ…..
அந்த
நாட்களின்
துயர
நிகழ்வுகள்…
வேறொரு
வகையில்
இன்னமும்
தொடர்கின்றன.
பகைவர்
எவரென
நாமுணரும்
தருணம்
இன்றெம்
முன்
வந்தது
இன்றுன்
நேசமிழந்த
சோகம்
நினைந்தேன்.
இதுவரை
காலமும்
நீ
நினைந்திரா
வகையில்
நிகழ்ந்த
நிகழ்வினால்
நின்மனமும்
மாறியிருக்கும்
ஆழ்மனதில்
புதைந்திருந்த
என்நினைவும்
மீண்டிருக்கும்.
மீளநாம்
இணையக்
காலம்
கனிந்தது!
சிந்தையால்
கவர்ந்த
சிங்களத்துக்
காதலியே
சீக்கிரமே
நாமிணைவோம்
மணம்
முடிப்போம்
இருவர்
உரிமை
ஏற்று
ஆதிமுதலாய்
இன்று
வரையில்
நாம்
வாழும்
இனிய
தீவு
நம்
நாடிஃகுதெனவே
முரசறைவோம்
வா
தோழி!
வீரகேசரி
வார
இதழில்
பிரசுரமானது
1988
-அழ. பகீரதன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)