தெரு முனையில் நான்

தெருவில் நான் பயணிக்கின்றேன்
தெரு என்னைச் சுமந்து செல்கின்றது
தெருவில்  என்னை நகர்த்துகின்றது வாகனம்
நானே தெருவை நகர்த்துதல் இலையாயினும்
நான் தெருக்களை நகர்த்துவதாய் உணர்கின்றேன்
நகரும் வாகனங்களில் நபர்கள் நகர்கின்றனர்
அவரவர் முகங்களில் அவரவர் வேகம்
அவரவர் நோக்குகளில் அவரவர் மார்க்கம்
பெறுமவற்றுள் யாதொன்றும் பேறிலையாயினும்
பயணங்கள்  ஏனோ பலகாலும் தொடர்கின்றன
அறுநிலை வரினும் ஆரும் உணருதலின்றி
அயற்சி இன்றி முயலுவர் பயணங்களில்..
பயனற்றன எனிலும் பயணங்களில்
மனக்குவிப்புடன் பயணிப்பதுவே இலக்காய்!
தெருக்கள் எங்கும் நானும் திரிகின்றேன்
இலக்கு எதுவென அறியாது புலம்புகின்றேன்
போகுமிடம் எங்குளதென புரியாது நகர்கின்றேன்
யாரிடம் வினவின் யார் எடுத்துரைப்பர்?
யாரும் அறிவரோ யான் போம் இடம்!
ஊடகம் ஒன்றுளது தேடகம் அதுவென
கூகுளுக்குள் குவிகின்றது என்முகம்
தெருவில் ஓரத்தில் நான் ஒதுங்கி..
தெருவில் கடப்பவர் பலர் உளர்
தெருவில் நடப்பவர் யார் உளர்
தெருவே என்னை வியப்பாய் பார்க்க
பார்ப்பார் யாருமில்லை பயணம் குறியாய்...
தெருக்கள் யாருக்காய்; யார் தெருக்களோ?
சுருங்கிய உலகுள் நானோ
குசலம் விசாரிப்பார் ஆருமற்ற தனியனாய்
கூகிளுக்குள் முகம் பதித்து தெருமுனையில்...

அழ பகீரதன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது