சிறு முயல்வில்...


எழுக எழுக என
என் முன் மொழிதல்கள்
தொழுது வாழும் பொழுதுகள்
கரைக எனக் கரைகின்றன காகங்கள்
சற்றும் சளைக்காமல் தொடர்க என
சாற்றும் குரல்கள்
பற்றுக்கொண்டு பண்ணும்
காரியங்களை விட்டுக்
கணக்கெடு மனிதர் மேன்மையென
கணப்பொழுதில் கண்முன் காட்சிகள்
விரியும் உலகில்தெரியும் பிரிவினைகள்
எரியும் பிரச்சனையாய் எங்கும் சூழலியல்
எவர் நலனில் எவர் அக்கறை
வியாபாரத் தனமாய் வில்லங்கம் பண்ண
அபிவிருத்தி கண்டு குளிர்கின்ற மனசு
அதனொடு விசமென கலந்த கலவைகள்
எதனொடு நானும் ஒன்றிக்க
உதவிடும் கரங்களுக்குள்
உயிர் பறிக்கும் நஞ்சென்றால்
பயிர் பச்சையெல்லாம் பாழ் படுமென்றால்
பாலை வனமாகும் எம் மண்ணென்றால்
குலை நடுக்கும் நிலையாச்சு
பின்னும் அமைதி வாழ்வு என
எண்ணி மகிழ்வதுவோ இக்கணங்கள்...
தெளிக எனச் சொல்லும் குரல்கள்
தேறிர் என கேட்கும் ஒலிகள்
ஆறிரோ ஆற்றிரோ என
இயம்பும் நட்பு உள்ளங்கள்
தெளிவனோ தேறுவேனோ
உயிர் பிழைப்பேனோ நாளை
உலகத்து குழந்தைகள் உயிர்த்திட
ஒரு சிறு முயல்வில்
நடை பயிலேனோ?
அழ.பகீரதன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது