படுத்திடுமினி கொடுங்கோல்!

ஏனந்த நாட்கள் மீண்டும் வருகின்றன
வானத்தில் கூக்குரல்கள் மீண்டும் ஒலிக்கின்றன
கானகத்தில் ஒப்பாரிகள் மீண்டும் கேட்கின்றன!
கொத்துக்கொத்தாய் மனிதர் அழிந்திடப்
பொத்தம்பொதுவாய் மனிதம் அழிந்தது
சாத்தியமாகாதென சரித்திரம் எழுதியது!
விடுதலைக்கான மார்க்கம் இழந்துநிற்க
சடுதியில் நிகழ்ந்தன சதிவலைத் திட்டங்கள்
கொடுமைகள் செய்தோர் மாய்ந்தனரில்லை!

கொடுமைகள் அரங்கேறத் திட்டமிட்டாரையே
விடுதலைக்கு துணைகேட்கும் நிலையாச்சு
கேடுசெய்தாரை அண்டிவாழ காலமாச்சோ!
இனிஎமக்கு இயலுவன எதுவெனத் தேர்வமோ
தனித்தியங்கி தரித்திரம் போக்குவதுவோ
சனிமாற்றம் வருமெனத் தான் காப்பதுவோ!
ஒடுக்கப்பட்டவர் தேசங்கள் எழுந்திடவென
விடுத்திடுவோம் ஒன்றுபட அழைப்புக்கள்
படுத்திடுமினி கொடுங்கோல் ஆட்சிகள்!



சென்ற வருடத்தில் முகநூலில் பதிவானது செம்மையாக்கத்துடன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது