எப்போதோ எழுதிய கவிதை
தனிமை ஏக்கம்
செந்தீப் பிளம்பாய்
ஞாயிறு மறையும்
அந்திப் பொழுதில்
நீள்பிரிவில் உன்னை
விடேனென விளம்பி
மீள்வேன் ஈராண்டில்
என உறுதி தந்து
பேரூந்தில் ஏறிப்
பிரிந்தாயே தலைவா!
ஓரிரு நாட்கள்
கொழும்பில் இருந்து
முகிலூ டறுத்து
வான்வழி செல்லும்
வானூர்தி தன்னில்
அமர்ந்தே சென்றாய்
அமெரிக்கா அருகில்
கனடாவில் நீயிருக்க
கண்கலங்கி நானிங்கே!
பனிமிகப் பொழியும்
குளிர்ந்த பூமியின்
குதூகல நினைவையும்
பணம்பல கிடைக்கும்
பாங்கையும் எழுதினாய்
பக்கத்தில் நீயின்றி
ஏக்கத்தில் நானிங்கு
வாடிடும் வாட்டத்தை
எப்படி அறிவாய்!
மாலையில் உந்தன்
மார்பினை நினைந்தே
இளையள் என் நெஞ்சம்
இரந்தே நிற்கும்
நிலையினை உணரா
நீமிக உழைத்த
பணத்தால் மனமது
குளிருமென நினைக்கிறாய்
நீயின்றி நாளோடுமோ?
கடினம் மிகப்பட்டு
அடிமையாய் நீயுழைத்து
உறக்கம் குறைத்து
உணவினைச் சுருக்கி
எப்போதோ பிறக்கும்
மகளுக்காய் உழைக்கிறாய்
இப்போதே இருக்கும்
இளையள் என்கனவை
உணர்ந்து வாராயோ!
சீவியம் செய்வதற்கு
சிறிதச்சம் இருப்பினும்
சித்திமாமி சோதரங்கள்
உறவுடன் வாழ்தலில்
உள்ளம் நிறையும்
உண்மை தெரிந்தும்
உங்குநீர் இருக்கின்றீர்
ஏழ்மை உளதெனிலும்
எனதன்பு நிறைவன்றோ?
இலையுதிர்ந்த கிளைகளில்
இரைவேண்டிக் கரைகின்ற
காக்கையினம் போலிங்கு
காகிதத்தை வேண்டிக்
காத்திருப்பேன்
காலையில்
மாலைவர வருந்தி
தினம் மெலிந்து
வாடுமென்
ஏக்கத்தைப் போக்கீரோ
பக்கத்தில் வாரீரோ?
அழ பகீரதன்
கருத்துகள்